ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச புனித பாப்பரசரை சந்திக்கப் போவதில்லை என தெரிவித்திருக்கும் நிலையில் அவரது இத்தாலிக்கான விஜயத்திலுள்ள மர்மத்தை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
- Advertisement -
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பபை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மரிக்கார் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் கடும் விமர்சனத்திற்குப் பின்னர், பாப்பரசரை சந்திக்கப் போவதில்லை என்கின்ற தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு அறிக்கை வெளியிட்டு தெரிவித்த நிலையில், இத்தாலிக்கு வேறு எந்த நோக்கத்திற்காக பிரதமர் செல்கின்றார்? வெறுமனே அவர்களது சொந்த செலவில் இத்தாலிக்கு செல்வதில்லை.
அரசாங்கத்தின் பணத்தில் உத்தியோகபூர்வ விஜயமாக மக்களின் வரிப்பணத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். ஆனால் எந்த நோக்கத்திற்காக இத்தாலிக்குச் செல்ல இருக்கின்றார்கள் என்பதை விளக்கமாகத் தெரிவித்துவிட்டால் கர்தினாலும் அமைதியடைவார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு சாதாரண அரச ஊழியர்கள் பெறும் விதத்திலான ஓய்வூதியத்தை அளிப்பதற்கு தீர்மானித்திருக்கின்ற முடிவானது, திருடனின் தாயிடம் திருடன் ஒளிந்திருக்கும் இடத்தைப்பற்றி கேட்பதற்குச் சமமாகும்.
இவ்வாறு ஆளுநர்கள் ஓய்வூதியத்தைப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அர்ஜுன மகேந்திரனுக்கும் அந்த ஓய்வூதியம் கிடைக்கும். இந்த அரசாங்கம் கடந்த தேர்தல்களில், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதாகவும், மத்திய வங்கி கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதாகவும் கூறியே ஆட்சிக்குவந்தது.
ஆனால் இப்படி ஓய்வூதியத்தை அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் திருடர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்குகின்ற அரசாங்கமாக இந்த அரசாங்கம் பெயர்பெற்றுவிடும் எனவும் தெரிவித்துள்ளளார்.