ஜப்பானிய அரசு அனுசரணையுடன் நடைபெறும் ஜப்பானிய – சீன அறிவுசார் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்ட 200 சீன கல்வியியலாளர்களை சீன இணையதளமொன்று துரோகிகள் எனவும் ஜப்பானிடம் பணம் பெறுபவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளதாக சௌத் சைனா மோர்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
- Advertisement -
சமீப காலமாக சீனாவில் அதிகரித்து வரும் சீன தேசியவாத உணர்வை இது எடுத்துக் காட்டுவதாகவும் சர்வதேச ரீதியாக நட்புறவு பரிமாற்றங்களில் சீனாவுக்கு இது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -
ஜப்பானிய தொண்டு நிறுவனமொன்று அந்நாட்டின் ஒத்துழைப்புடன் இக்கல்வியியலாளர் பரிமாற்றல் திட்டத்தை 2008 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ஜப்பானுக்கு செல்லும் சீன கல்வியியலாளர்கள் ஜப்பானிய செல்வாக்குக்கு மண்டியிடுவதாகவும், பணம் பெறுவதாகவும் மேற்படி இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இப்பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜப்பான் சென்று திரும்பியிருக்கும் ஜியாங் என்ற எழுத்தாளர் தான் பணம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளதை முற்றிலுமாக மறுத்துள்ளதோடு இது வெறும் கலாசார பரிமாற்றம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதோடு கிழக்கு சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை ஜப்பான் எதிர்த்து வருகிறது.