வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் இன்றைய கொவிட் நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 409 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் யாழ். மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரம் ஆலய மகா சிவாரத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வீதி சீரமைப்புப் ணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.