மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல்படை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட கடலட்டையின் பெறுமதி 30 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தனையடுத்து தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் குழு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேரங்கோட்டை கடற்கரை பகுதியில் சந்தேகபடும்படி கிடந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து கடலோர காவல் படை அதிகாரிகள் கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமிற்கு எடுத்து சென்று எடையிட்ட போது அதில் 450 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுப்ரஸ்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை ஓரத்தில் உள்ள தோப்பு ஒன்றில் சோதனை செய்ததில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட மற்றும் உயிருடன் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரிய வந்ததையடுத்து அந்த தோப்பில் இருந்து 952 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு மண்டபம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய வேதாளை மற்றும் மரக்காயர்பட்டிணத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல் நிலைய பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இன்று மாலை வரை இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.