கிளிநொச்சி – இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதா நகர் இறங்குதுறையில் இடம்பெற்றது.

இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் பங்குத் தந்தையர்களும், சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அgடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று குறித்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.