கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக சுவிட்சர்லாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனினும் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமையானது அங்குள்ள மக்களை பதற்றத்திற்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘சுவிஸ்மெடிக்’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.