தண்ணீரை ஏற்றுமதி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவாரெலியா, ஹோப் எஸ்டேட்டில் உள்ள நீர் ஊற்றுக்கள் குறித்து ஹந்தனை அடிப்படைக் கற்கைகள் நிறுவனத்தின் பேராசிரியர்கள் குழு நடத்திய ஆய்வின் அறிக்கையை வெளியிடும் ஆரம்ப வைபவத்திலே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, நுவரெலியா ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த நீர் ஏற்றுக்களின் ஒரு பகுதியை எதுவித வடிகட்டலும் இன்றி பயன்படுத்த முடியும் என்ற அதிசயம் ஆய்வுகள்மூலம் தெரிய வந்துள்ளன. பேராசிரியர்கள் சமன் செனவீர, ரோஹன் வீரசூரியா, அத்துல சேனாரத்ன மற்றும் லக்மல் ஜெயரத்ன ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டு, சுத்திகரிக்காமல் குடிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையானது நீர்வளம் நிறைந்ததாகவும், நீர் முகாமை மற்றும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நீரை பரிமாற்றம் செய்யக் கூடிய வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கொண்ட நாடாகும். நீரை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவது எங்களுக்கு அவ்வளவு கடினமான ஒரு விடயமல்ல.
குடிநீர் போத்தல் வர்த்தகம் உள்ளூரில் பாரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தகமாகும், தரமான குடிநீர் போத்தல்களை சந்தைக்கு விடுவது குறித்து ஆராய வேண்டியது நுகர்வோர் விவகார அதிகார சபையின் பொறுப்பாகும். அதேநேரம், வெளிநாடுகளுக்கு தண்ணீர் ஏற்றுமதி மூலம் அதிகளவு ஏற்றுமதி வருவாயை ஈட்டவும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றார்.