கடந்த காலங்களில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் டீல்களை நடாத்திய பழக்கதோஷத்திலேயே தற்போதும் தனது கருத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்பு 20ஆவது திருத்தத்திற்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவளித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்து, பணத்துக்கு சோரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்களை நிராகரித்து நஸீர் அஹமட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிடுள்ளார். தொடர்ந்தும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளதாவது,
- Advertisement -
ராஜித சேனாரத்ன கடந்த காலங்களில் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் இவ்வாறான டீல்களை நடாத்திய பழக்கதோஷத்திலேயே தற்போதும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். இலகுவில் சோரம்போகும் மற்றும் பணத்துக்கு அடிமையாகும் எளிய அரசியல்வாதிக்கு ராஜித சேனாரத்ன சிறந்த உதாரணம்.

இவரது இந்த எளிய சிந்தனைகளில் தான், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்பிக்களையும் பார்க்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் அபிலாஷைகளைச் சவாலுக்கு உட்படுத்தும் விடயங்கள் பற்றி ராஜிதவுக்குத் தெரியுமா? இழந்து போன நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை வெல்ல வேண்டிய வியூகங்களையே நாம் செய்து வருகிறோம்.
வியாபாரம் என்பது எமது பரம்பரைச் சொத்து. இதை அரசியலுக்குள் புகுத்தும் எந்தத் தேவையும் எமக்கில்லை. இவர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், அரச சேவைகளும் வியாபார நோக்கில் இருந்ததை இந்த நாடே அறியும். வெள்ளை வான் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி, அசிங்க அரசியல் செய்த இவரை, எமது மக்கள் பொருட்படுத்தப் போவதும் இல்லை.
இல்லாததைப் பேசியும் கற்பனைக் காரணங்கள் கூறியும் எமது சமூக அடைவு மற்றும் லட்சியத்திலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது. வருமானத்தை எதிர்பார்த்து ராஜபக்க்ஷக்களை விமர்சிக்கும் ராஜிதவுக்கு சமயங்களின் அறிவு பற்றி எங்கே தெரியப்போகிறது. கலாசாரம் மற்றும் நாகரிகத்தை மதிக்கின்ற மக்கள் வாழும் நாட்டில், மதமும் சமூகமும் விற்கப்படுவதாகவும் இவர், விமர்சித்துள்ளமை கவலையளிக்கிறது.
முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் மதத்தை பண்டப் பொருளாக இவர் கருதுகிறார் போலுள்ளது. மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை கொச்சைப்படுத்தப்படுவதை இல்லாதொழிப்பதே, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்போன்ற எம்பிக்களின் தேவை. இதற்கான வியூகங்களில்தான் 20ஆவது திருத்தம் பற்றிச் சிந்தித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.