
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பஸ் தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து சபையும் தனியார் பஸ் உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்து வந்த நிலையில் யாழ் மாநகர சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தொடர்பில் யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிசாருக்கும் அறிவித்து, இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் வைத்தியசாலை வீதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டால் யாழ்.நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும். எனவே அனைவரினதும் ஒத்துழைப்பை இது தொடர்பில் வேண்டி நிற்கின்றேன் எனவும் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.