குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் என தம்மைக் கூறிய சிலர் விகாரைகளை குறி வைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபர்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்தார்.
- Advertisement -

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நேற்று முன்தினம் நண்பகல் கதிர்காமத்தில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு சென்ற இருவர் தம்மை கொழும்பு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, குறித்த விகாரையின் விகாராதிபதியை அச்சுறுத்தி கையடக்க தொலைபேசி மற்றும் பெறுமதி மிக்க புத்தர் சிலையொன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
- Advertisement -

இதேபோன்று நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அவுங்கல்ல பொலிஸ் பிரிவில் பலபிட்டிய – பாத்தேகம விகாரைக்கு வந்த குழுவொன்று தம்மை மேல் மாகாண குற்ற விசாரணைப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த விகாரையின் விகாராதிபதியிடம் பணத்தை கொள்ளையிட முயற்சித்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.