மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களுக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்ற பின்னர், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இலங்கை தொடங்கியது.
அதன்படி, முதன் கட்டமாக சுகாதாரத் துறை, முப்படைகள், பொலிஸ் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 2 இலட்சத்து 50000 ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்த விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.