மழைக்காலம் வந்தாலே கொண்டாட்டம் தான். நமது மாவட்டத்திற்கு விடுமுறை எப்போது அறிவிப்பார்கள் என்று தொலைக்காட்சியின் முன் அமர்ந்து காத்திருக்கும் குழந்தைகளும், கொட்டும் மழையிலும் கோவித்துக்கொள்ளாமல் வேலைக்கு செல்லும் தந்தையும், துவைத்த துணிகள் எல்லாம் காயாமல் இருப்பதை கண்டு வருத்தப்படும் தாயும் மழைக்காலத்தின் அழகு.
- Advertisement -
ஆனால் மழைக்காலங்கள் அழகை மட்டும் கொண்டு வருவதில்லை. ஆபத்துகளையும், உடல் நலக்குறைவையும் கூடவே கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் எளிதில் ஏற்படும் வாய்ப்புள்ளது. பருவம் மற்றும் வானிலை மாறுதல்களால் உடல் எப்போதும் சோம்பலுடன் காணப்படும்.
- Advertisement -
மேலும் வெயில் காலத்தில் சாப்பிடுவது போல மழைக்காலத்தில் எல்லா உணவுகளையும் உண்ண முடியாது, உண்ணவும் கூடாது. அது நமக்கு உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும்.
கடைத்தெருவில் இருக்கும் உணவுகளை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். தெருவில் விற்கப்படும் உணவுகள் பெரும்பாலும் நன்றாக மூடி இருப்பதில்லை. எனவே இம்மாதிரியான உணவு பொருட்களின் மூலம் நோய் தொற்று எளிதில் பரவக்கூடும். தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும்.
மேலும் மழைக்காலங்களில் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிப்பதன் மூலம் நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம். முடிந்தால் நீரை காய்ச்சும் போது மிளகு அல்லது சீரகம் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எளிதில் நோய்வாய்ப்படாம் நம்மை காத்துக்கொள்ளவும் உதவும்.
ஜன்னல் ஓரம் சாரல் வரும் போது நம் மனம் தேடுவதெல்லாம் அமைதியான ஒரு இடமும் சூடான ரெண்டு பஜ்ஜியும் தான். ஆனால் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் மழைக்காலத்தில் ஜீரண சக்தி மிகக் குறைவாக இருக்கும். அந்தசமயத்தில் இப்படி பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கும். மேலும் இதனால் நெஞ்சு எரிச்சல், வயிறு மந்தத் தன்மை , வயிறு கோளாறு போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும்.
கடலில் வாழும் உயிரினங்களை உண்பதையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழைக்காலம் தான் கடலில் வாழும் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். அதனால் அவற்றின் வயிற்றில் முட்டைகள் இருக்கும். அந்த முட்டைகள் அடங்கிய மீன்களை சாப்பிடும் போது அது விஷமாக மாற நேரிடும். மேலும் அது தீவிரமான வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
கீரை மற்றும் காலிஃப்ளவர் உடலுக்கு எவ்வளவு சத்தானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவைகளையும் முடிந்த வரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மண்ணில் விளைவதால் கிருமிகள் இலைகளில் தொற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும். அப்படியே அவற்றை சாப்பிட்டாலும் நன்றாக கொதிக்க வைத்த நீரில் கழுவி அதில் உள்ள கிருமிகளை கொன்று பின்னர் சாப்பிட வேண்டும்.
காளான் மண்ணில் குறிப்பாக மழைக்காலத்தில் தளதளவென வளரக் கூடியது. எனவே குறைந்த விலையிலும் அது கிடைக்கலாம். ஆனால் அவற்றை நாம் தவிர்ப்பது தான் நமக்கு நல்லது.
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே!! என்று ஆட்டம் போட்டால் மட்டும் போதாது. அதே நேரத்தில் நம் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்வதும் அவசியம்.